சொன்னதைக் கேட்கலைன்னா சுட்டுடுவேன்... துப்பாக்கி முனையில் மிரட்டிய கேரள எம்.எல்.ஏ.
சொன்னதைக் கேட்கவில்லை என்றால் சுட்டுக் கொன்று விடுவேன் என்று தொழிலாளர்களைத் துப்பாக்கிக் காட்டி மிரட்டிய எம்.எல்.ஏவால் கேரள மாநிலத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் தொழிலாளர்களை எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கியைக் காட்டி, சொன்னதைக் கேட்கவில்லை என்றால் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள முண்டகயம் பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கியிருந்து தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.
எஸ்டேட்டை ஒட்டிய நிலப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எஸ்டேட் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து பூஞ்ஞார் தொகுதி எம்எல்ஏ பி. சி. ஜார்ஜ் பிரச்சனை குறித்து விசாரிக்க நேரில் வந்தார்.
அப்போது அவரை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால், கோபமடைந்த ஜார்ஜ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து தொழிலாளர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.