கேரளாவில் முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 5 மருத்துவமனைகள் மீது பாய்ந்தது வழக்கு
கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழர் முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 5 மருத்துவமனைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய தமிழர் முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவரது மரணத்திற்கு காரணமான 5 மருத்துவமனைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 33 வயதாகும் இவரது மனைவி பெயர் பாப்பா. கொல்லத்தில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுடன் முருகனின் நண்பர் முத்துவும் தங்கியிருந்தார்.
ஞாயிறன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கொல்லத்தை அடுத்த பத்தளுர், ஈம்பிக்காமுக்கு அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதினர்.
இதில் இரண்டு வாகனத்தில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள், இதுபற்றி நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகனை தவிர மற்ற 3 பேரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
திருவனந்தபுரம் மருத்துவமனை
முருகனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கொல்லத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது முருகனுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுமதித்து சிகிச்சை அளிக்க மறுத்தனர். மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லை என்று கூறி விட்டனர்.
சிகிச்சை தர மறுப்பு
அருகில் உள்ள மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மெடிட்ரைனா ஆகிய மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு வென்ட்டிலேட்டர்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், முருகனை கொண்டு சென்றனர்.அங்கு முருகன் ஏழை என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொல்லம் மருத்துவமனை
விடா முயற்சியுடன் எஸ்.யு.டி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைகளுக்கு முருகனைக் கொண்டு சென்றனர். ஆனால் இங்கும் முருகனை அனுமதிக்கவில்லை. பிறகு மீண்டும் 70 கிமீ தொலைவில் உள்ள கொல்லம், பூயாப்பல்லியில் உள்ள அஜீஜியா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முருகனை அழைத்து சென்றார் ராஜூ ஆனால் இங்கும் முருகனுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
7 மணி நேர அலைச்சல்
திருவனந்தபுரத்தில் இருந்து முருகனை மீண்டும் முருகனை கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் இங்கு வந்த போது முருகன் இறந்து விட்டதாக அறிவித்தனர். அதாவது ஞாயிறு இரவு 11 மணிக்கு விபத்து நடந்துள்ளது. திங்கள் காலை 6 மணிக்கு முருகன் இறந்துள்ளார். 7 மணி நேரம் சிகிச்சைக்காகப் போராடியும் எவ்விதப் பயனுமில்லாமல் போனது.
முருகன் மரணம்
ஏழை என்ற காரணத்திற்காக இளக்ககாரமாக நினைத்து அலைக்கழித்து விட்டார்களே, இப்படி அப்பாவி ஒருவரின் உயிர் பலியாகிவிட்டதே என்று ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர்கள் சமூக ஆர்வலர்களுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். அடுத்த நிமிடம் முருகன் மரண செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் சென்றது.
போலீசில் புகார்
இது கேரள மனித உரிமை கமிஷன் உறுப்பினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்கள் இப்பிரச்சினையை தாமாகவே முன் வந்து விசாரித்தனர். மேலும் முருகனுக்கு மனிதாபிமான முறையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
5 மருத்துவமனைகள் மீது வழக்கு
புகாரை பெற்றுக் கொண்ட கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, புகாருக்கு ஆளான திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவனந்தபுரம், கொல்லத்தில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அமைச்சர் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவும் விளக்கம் அளித்தார். முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.