கேரளாவில் கேஎப்சி, மெக்டொனால்டு உணவகங்களை அடித்து நொறுக்கிய நக்ஸலைட்டுகள்!
பாலக்காடு: அன்னிய நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷத்துடன் வந்த ஒரு கும்பல் கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள கேஎப்சி மற்றும் மெக்டொனால்டு ஆகிய பன்னாட்டு சங்கிலி தொடர் உணவகங்களை அடித்து நொறுக்கியது.
கேரளாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், பாலக்காடு நகருக்குள்ளேயே அவர்களின் ஆதரவாளர்கள் புகுந்து ஒரு தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு நகருக்குள் உள்ள மெக்டொனால்டு மற்றும் கேஎப்சி ஆகிய உணவகங்களை அடித்து நொறுக்கினர். இதனால் அதன் கண்ணாடி தடுப்புகள் நொறுங்கி விழுந்தன.
சுமார் 9 பேர் கொண்ட கும்பல் இத்தாக்குதல்களில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தாக்குதலுக்கு பிறகு துண்டு பிரசுரங்களை அங்கு அள்ளி வீசிவிட்டு அக்கும்பல் தப்பியோடிவிட்டது.
அந்த துண்டு பிரசுரத்தில், தங்களது இயக்கத்தின் பத்தாவது ஆண்டு துவக்க நிகழ்ச்சியை கொண்டாடிவரும் இந்த நேரத்தில், அன்னிய நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கேஎப்சியும், மெக்டொனால்டும் இந்திய மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான், எங்கள் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசுரத்தின்கீழே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மாவோயிஸ்ட் பிரிவு) மேற்கு மண்டல செயலாளர் கையெழுத்து உள்ளது.
இதேபோல வயநாடு, அட்டப்பாடி வனத்துறை அலுவலகங்களும் அதிகாலையில் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அளித்த பேட்டியில் "நடைபெற்ற தாக்குதல்களை உண்மையிலேயே மாவோயிஸ்டுகள்தான் நடத்தினரா, அல்லது அவர்கள் பெயரை பயன்படுத்தி வேறு யாரும் இத்தாக்குதலில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்படும். மாவோயிஸ்டுகளே தாக்குதல் நடத்தியிருந்தாலும் கூட மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களை சமாளிக்க கேரள போலீசார் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.