2 வாக்காளர் அட்டை... சர்ச்சையில் சிக்கினார் கிரண்பேடி - தேர்தல் ஆணையம் விசாரணை!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கிரண் பேடியிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளராக கிருஷ்ணா நகர் தொகுதிய்ல் போட்டியிடுகிறார் கிரண்பேடி. அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிரண் பேடி, உதய் பார்க் பகுதியை குறிப்பிட்டு எண். டி.இசட்.டி 1656909 என்ற எண் தாங்கி ஒரு அடையாள அட்டையும், தால்கதோரா சந்து பகுதியை குறிப்பிட்டு எஸ்.ஜே.இ 0047969 எண்ணுடன் வேறு ஒரு அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரி கூறியதாவது:
டெல்லியில் உள்ள உதய் பூங்கா முகவரியிலும், தல்கோத்ரா லேன் முகவரியிலும் கிரண் பேடிக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே தெரியும். இரு வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் உதய் பூங்கா முகவரியே குறிப்பிடப்பட்டுள்ளார். அவரிடம் உள்ள இரண்டு வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை நீக்கம் செய்யக் கோரி அவர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அவ்வாறு அவர் விண்ணப்பம் ஏதும் அளிக்காதபட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.