கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி மாரடைப்பால் காலமானார்
டெல்லி: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடியின் கணவரும், சமூக சேவகருமான பிரிஜ் பேடி மாரடைப்பால் டெல்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.
சிறுநீர்ப் பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரிஜ் பேடி, அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லி மேதாந்தா மருத்துவமனைக்கு பிரிஜ் பேடி மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக பிரிஜ் பேடிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சமூக சேவகரான மறைந்த பிரிஜ் பேடி போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெற்றோர்களின் குழந்தைகளுக்காக சிறப்புப் பள்ளி ஒன்றை நடத்தியுள்ளார். இதைத் தவிர பல்வேறு சமூக நலப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். பிரிஜ் பேடியின் மறைவுக்கு பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.