சிறிய குண்டு.. பெரிய எச்சரிக்கை..! கொல்கத்தா குண்டுவெடிப்பு சொல்லும் பாடம்
கொல்கத்தா: தீவிரவாதிகளுக்கு எதிரான விசாரணை வேகம்பிடித்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொல்கத்தாவிலுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி அலுவலகம் எதிரே குண்டு வீசப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் உள்ள வீட்டில், கடந்த அக்டோபர் 2ம் தேதி பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 2 பேர் பலியானார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேற்குவங்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
3 பேர் கைது
குண்டு வெடித்த வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் வேலையில் சில தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது. வெடிகுண்டு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து சிதறி விட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில், மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வங்கதேச தீவிரவாதிகள்
குண்டுவெடிப்பில் வங்காள தேசத்தை சேர்ந்த தடைசெய்யப்பட்ட ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் JMB என்ற தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருப்பது உறுதிபட தெரியவந்தது. இந்நிலையில், நேற்றிரவு சுமார் 7.30 மணிக்கு கொல்கத்தாவிலுள்ள தேசிய புலனாய்வு பிரிவு அலுவலகம் எதிரே வெடிகுண்டு வீசப்பட்டது. சிறிய அளவிலான குண்டுதான் வெடிக்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிாயகியுள்ளன.
புதுநாடு திட்டம்
தேசிய புலனாய்வு அமைப்பினர் தங்களது விசாரணையில் வேகத்தை கூட்டி, தீவிரவாதிகள் புதுநாடு உருவாக்கும் திட்டத்தில் உள்ளதையும், பிற முக்கிய தகவல்களையும் கண்டுபிடித்தனர். வெடிகுண்டுகள் தயாரிக்க மருந்து சப்ளை செய்த அம்ஜத் அலி என்ற வங்கதேசத்தை சேர்ந்தவரை சமீபத்தில் கைது செய்தனர். எனவே, விசாரணை அதிகாரிகளை பயமுறுத்துவதற்காக இந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாகவும், யாரையும் கொல்லும் நோக்கம் இதில் இருப்பதாக தெரியவில்லை எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்
வெடித்த வெடிகுண்டை சோதித்து பார்த்தபோது அதிலுள்ள மருந்து பொருட்கள் சக்தி குறைந்தவை என்பது தெரியவந்துள்ளது. எனவே அச்சுறுத்தும் முயற்சிதான் என்பது தெளிவாகியுள்ளது. இந்த குண்டை வீசிய தீவிரவாதியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதற்காக அலுவலகத்தின் வெளியே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் பார்த்து வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து குண்டு வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்தில் அநாதையாக நின்ற ஒரு கார் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மே.வங்க மாநில போலீஸ் டிஜிபிக்கு புலனாய்வு அமைப்பு சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.