மோசடி வழக்கை சந்தித்தே ஆக வேண்டும்.. குமாரசாமி, மனைவி அனிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் நெத்தியடி!
டெல்லி: கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மீதான இரும்பு தாது மோசடி, நில மோசடி வழக்குகளை ரத்து செய்த ஹைகோர்ட் தீர்ப்பு செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் குமாரசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனான குமாரசாமி, மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் கர்நாடக மாநில தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
குமாரசாமி, பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வராகவும் பதவி வகித்தவர். அக்காலகட்டத்தில், 80 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்ததாகவும், இரும்பு குவாரி நிறுவனம் ஒன்றுக்கு, சுமார் 1 லட்சம் டன் மதிப்புள்ள தாதுக்களை வெட்டி எடுக்க அனுமதித்ததாகவும் புகார் எழுந்தது.
முன்னாள் முதல்வர்கள் மீது வழக்கு
பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ஜெ.ஆப்ரஹாம், கடந்த 2012 ஏப்ரல் மாதம் லோக்ஆயுக்தாவில் கொடுத்த புகாரில் இந்த தகவல்களை தெரிவித்திருந்தார். காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பாஜகவின் எடியூரப்பா ஆகியோர் முதல்வர்களாக இருந்த காலகட்டங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் புகார் அளித்துள்ளவர்தான் இந்த ஆப்ரஹாம்.
ஹைகோர்ட்டில் தள்ளுபடி
புகாரை விசாரித்த லோக்ஆயுக்தா விசாரணை அறிக்கையை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதனடிப்படையில், ஆதாரமில்லை என கூறி, குமாரசாமி மீதான கிரிமினல் புகாரை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குமாரசாமியின் மனைவி, அனிதாவும் தப்பித்தார்.
சுப்ரீம் கோர்ட் நெருக்கடி
இந்நிலையில், ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குமாரசாமி மற்றும் அவர் மனைவி மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது. குமாரசாமி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஆவேசமாக பேசிய குமாரசாமி
காவிரி நதிநீர் தொடர்பான கர்நாடக சிறப்பு சட்டசபை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, காவிரி வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை கூறினார். ஜெயலலிதாவிடம் வழக்கறிஞராக பணியாற்றியவர்தான், காவிரி பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவர் என வெளியே பேசிக்கொள்வதாக குமாரசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.