சிறுவர் நல ஆணையம் கோபம்.. சன் டிவி 'குட்டி சுட்டீஸ்' பாணியிலான சூர்யா டிவி சிறுவர் நிகழ்ச்சி ரத்து
திருவனந்தபுரம்: சன் டிவியில் ஒளிபரப்பாகும் குட்டி சுட்டீஸ் பாணியில், மலையாளத்தில், சூர்யா டிவி ஒளிபரப்பி வந்த 'குட்டி பட்டாளம்' நிகழ்ச்சிக்கு, கேரள மாநில குழந்தைகள் நல ஆணையம், கிடுக்கிப்பிடி போட்டதால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இமான் அண்ணாச்சி நடத்தி வரும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில், சிறுவர், சிறுமிகள் சிரிக்க சிரிக்க பேசினாலும், சில நேரங்களில் குடும்பங்களில் நடைபெறும் விஷயங்களை வெளியில் போட்டு உடைப்பது போல அவர்கள் பேசுவது முகம் சுளிக்க வைக்கும்.
இதேபோலத்தான் சன் டிவி குரூப்பை சேர்ந்த சூர்யா டிவி குட்டி பட்டாளம் என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் கடுப்பை சம்பாதித்தது. 4 வருடங்கள் முன்பு அந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிகழ்வு இன்று தடை போடும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.
குட்டி பட்டாளம் நிகழ்ச்சியில் 2 முதல் 5 வயதுக்குள் உள்ள சிறுவர், சிறுமிகள் பங்கேற்கலாம் என விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது. அதேபோன்றுதான் அன்றைய தினம், 2ம் வகுப்பு மாணவி ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார்.
நிகழ்ச்சியை பெண் தொகுப்பாளினி நடத்தினார். அந்த சிறுமியிடம், நீ ஏன் இங்கு வந்தாய் என கேட்டார். அதற்கு சிறுமி, கல்யாணம் செய்ய என்று கூறினார். உடனே பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"இந்த பொண்ணு, கல்யாணம் செய்ய ரொம்ப ஆசையா இருக்குது.." என்று பார்வையாளர்களை நோக்கி கூறினார் தொகுப்பாளினி. இதற்கு சிறுமியின் பெற்றோர் உட்பட அனைவரும் மீண்டும் சிரித்தனர்.
அதோடு நின்றாரா அந்த தொகுப்பாளினி. இல்லை.. "இந்த கூட்டத்தில் யார் உனக்கு புருஷனாக வர வேண்டும்" என அவர் கேட்க, அந்த பச்சை குழந்தை யாரோ ஒரு ஆணை கை காட்டியது. அதற்கும் கூட்டத்தில் சிரிப்பு.
இந்த கொடுமையை பார்த்துவிட்டுதான், மலப்புரத்தை சேர்ந்த ஹசிம் கோலம்பன் என்பவர், கேரள சிறுவர் நல கமிஷனுக்கு கடந்த ஆண்டு புகார் செய்தார். இந்த நிகழ்ச்சி, சிறுவர்களுக்கு மென்டல் டார்ச்சர் கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இரட்டை அர்த்தத்தில் குழந்தைகளிடம் தொகுப்பாளினி பேசுவதாகவும் புகாரில் தெரிவித்தார்.
இதையடுத்து, நெருக்கடி அதிகரித்த நிலையில், இவ்வாண்டு மார்ச் 23ம் தேதியோடு ஷோவை முடித்துக்கொள்வதாக அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் சார்பில் சிறுவர் நல கமிஷனிடம் விளக்கம் கூறப்பட்டுள்ளது. எனவே மனுவை முடித்துவைப்பதாக கேரள சிறுவர் நல கமிஷன் அறிவித்துள்ளது.