போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய உ.பி. 'சொர்ணாக்கா' கைது
அலகாபாத்: வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த பெண் தாதா ஸ்வேதா குப்தாவை அலகாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் இருக்கும் பிரபல வாகன ஏஜென்சி நிறுவனத்தில் கிளார்க்காக கடந்த 2007ம் ஆண்டு சேர்ந்தவர் ஸ்வேதா குப்தா. வாகன ஏஜென்சியில் வேலை செய்வதை விட வாகனங்களை திருடி விற்பனை செய்தால் சொகுசாக வாழலாம் என்று நினைத்தார் ஸ்வேதா. இதையடுத்து அலகாபாத்தில் பைக்குகள், கார்களை திருடி விற்பனை செய்யத் துவங்கினார்.
சில காலத்தில் ஸ்வேதா போலீசாருக்கு தலைவலியாக மாறினார். தொடர்ந்து அவர் வாகனங்களை திருடினாலும் போலீசார் கையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தார். ஸ்வேதாவின் வியாபாரம் பெரிதான உடன் அவர் பல்வேறு அலுவலங்களை துவங்கி அதன் மூலம் வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் அலகாபாத் போலீசார் ஸ்வேதாவை எப்படியும் கைது செய்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து குற்றிப்பிரிவு போலீசாரின் உதவியை நாடினர். கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி வாகனம் திருடி போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் ஸ்வேதாவின் கூட்டாளியான சிவா. இதையடுத்து கடந்த 2 மாதங்களில் மட்டும் ஸ்வேதாவின் ஆட்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.
இதை பார்த்த ஸ்வேதா ஜம்மு காஷ்மீருக்கு தப்பியோடினார். பின்னர் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கி இருந்தார். அவரது செல்போனை போலீசார் டிராக் செய்து வந்தனர். இந்நிலையில் அலகாபாத் வந்த ஸ்வேதாவை போலீசார் கைது செய்தனர். திருடப்படும் வாகனங்களை உன்னாவ், கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைத்து அங்கு விற்பனை செய்வதாக விசாரணையில் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.