60 மில்லியன் டாலர் கேட்டார் பா.ஜ.க. எம்.பி வருண் காந்தி...சர்ச்சையில் சிக்க வைக்கும் லலித் மோடி!!
டெல்லி: லண்டனில் தலைமறைவாக உள்ள தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி தமக்கு உதவிசெய்வதவர்கள் என்று ஒவ்வொருவரது பெயரையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறது. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்தி தம்மை சந்தித்ததாக கூறி இருக்கிறார் லலித் மோடி.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவையும் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்பது காங்கிரஸின் தொடர் கோரிக்கை.
லலித் மோடிக்கு ஆதரவாக நீதிமன்ற் ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும், தனது மகன் துஷ்யந்த் நடத்தி வரும் நிறுவனங்களின் மூலம் ரூ.11 கோடி வரை ஆதாயம் பெற்றதாகவும் வசுந்தரா ராஜே மீது காங்கிரஸ் குற்றம் சுமத்தி இருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் யாரெல்லாம் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று லலித் மோடி ட்விட்டரில் சிலரது பெயரை வெளிட்டார். லண்டனில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதோரா ஆகியோரும் தம்மை சந்தித்து பேசினர் என்று லலித் மோடி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்திருந்தது.
இதன் பின்னர் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை லலித் மோடி முன்வைத்தார்.
1/2 Please clarify @varungandhi80 did u or did u not come to my house in london. Whilst staying at the Ritz hotel in lon a few years ago -
— Lalit Kumar Modi (@LalitKModi) June 30, 2015
தற்போது பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான வருண்காந்தியையும் சிக்க வைத்துள்ளார் லலித் மோடி. தமக்கு உதவிசெய்ய 60 மில்லியன் டாலர் வருண்காந்தி கேட்டார் என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.
தற்போது வருண்காந்தியை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள லலித் மோடி, லண்டனில் உள்ள வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வருண் காந்தி என்னை சந்தித்து பேசினார். குடியுரிமை கிடைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கூறி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதிஅளித்தார். இதற்காக வருண்காந்தி 60 மில்லியன் டாலர்களை கேட்டார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால் லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டை வருண் காந்தி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். அடிப்படை ஆதாரமற்ற 'நான்சென்ஸ்'தனமாக இருக்கிறது இது என்று பொங்கியுள்ளார் வருண் காந்தி.