ஏ.டி.பி. டென்னிஸ்: மகன் கார்த்திக்காக சிபாரிசுக்கு சீனியை அனுப்பிய சிதம்பரம்-லலித் மோடி புது 'பாம்'
டெல்லி: லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே ஆகியோரின் தலைகள் உருண்டு கொண்டிருக்கின்றன.. இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்துக்காக தம்மிடம் சிபாரிசுக்கு கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசனை அனுப்பியதாக புது பாம் ஒன்றை வீசியிருக்கிறார் லலித் மோடி.
ஐ.பி.எல். நிதி மோசடி வழக்குகளில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருப்பவர் லலித் மோடி. லண்டனில் பதுங்கி இருக்கும் லலித் மோடி இந்திய அரசியலில் புயலை வீச செய்யும் வகையில் பேட்டிகளை அளித்து வருகிறார்.
As Union Minister did u ever use ur clout to promote your son Karti's business interests? https://t.co/zggh4xeUzN pic.twitter.com/LYAwl6ZDmD
— Lalit Kumar Modi (@LalitKModi) July 22, 2015
இந்த வரிசையில் இந்தியா சம்வத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குறித்த சர்ச்சை தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் லலித் மோடி கூறியுள்ளதாவது:
2009ஆம் ஆண்டு சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளை நடத்துவதற்கு பதிலாக மலேசியாவில் நடத்தலாம் என அதன் சர்வதேச நிர்வாகக் குழு (ஐ.எம்.ஜி) முடிவு செய்திருந்தது. இந்த சென்னை போட்டிகளை நடத்துகிற குழுவின் தலைவராக இருந்தவர் அப்போது மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இதனால் சிதம்பரம் அதிர்ச்சி அடைந்திருந்தார்.
போட்டிகளை மலேசியாவில் நடத்தலாம் என்ற சர்வதேச நிர்வாகக் குழுவான ஐ.எம்.ஜி.யின் முடிவுகளைத் தடுக்க வேண்டும் என்று சிதம்பரத்துக்காக கிரிக்கெட் வாரியத் தலைவராக சீனிவாசன் என்னிடம் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நானும் அந்த சர்வதேச நிர்வாகக் குழுவிடம் பேசினேன்.
அவர்களோ, இந்த போட்டிகளை மலேசியாவில் நடத்தினால் ரூ18 கோடி தருவதாக கூறுகிறார்கள்.. ஆனால் இந்தியாவில் நடத்தினால் ரூ8 கோடிதான் செலுத்துவோம் என்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
இதை நான் சீனிவாசனிடம் தெரிவித்தேன்.. ஆனால் சீனிவாசனோ சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்காக சென்னையில் நடத்துவதற்காக பேசுமாறு என்னிடம் வலியுறுத்தினார். பின்னர் அந்த டென்னிஸ் அமைப்பின் சர்வதேச நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஆண்ட்ரூ வைல்ட்ப்ளட்டிடம் பேசி சென்னையிலேயே போட்டிகளை நடத்த ஒப்புக் கொள்ள வைத்தேன்..
அதாவது ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வர்த்தக நலனுக்காக சீனிவாசன் என்னை இந்த விவகாரத்தில் தலையிடச் சொன்னார்.. இதை அவர்களால் மறுக்க முடியாது.
இவ்வாறு லலித் மோடி கூறியுள்ளார். இதனையே தமது ட்விட்டர் பக்கங்களிலும் போட்டு பற்ற வைத்துள்ளார் லலித் மோடி.