முலாயமின் அண்ணன் பேரனுக்கு தனது இளைய மகளைக் கட்டிக் கொடுக்கிறார் லாலு பிரசாத்!
லக்னோ: உ.பிக்கும், பீகாருக்கும் இடையே புதிய உறவு மலரப் போகிறது. உ.பியின் அரசியல் ஜாம்பவான் முலாயம் சிங் யாதவின் அண்ணன் பேரனுக்கும், பீகாரின் அரசியல் ஜாம்பவான் லாலு பிரசாத்த்தின் இளைய மகளுக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.
மாப்பிள்ளையின் பெயர் தேஜ் பிரதாப். லாலுவின் கடைசி மகள் பெயர் ராஜ்லட்சுமி என்கிற லட்சுமி. இருவருக்கும் டிசம்பர் மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரமாண்டமான அளவில் திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
தேஜ் பிரதாப், முலாயமின் அண்ணன் ரதன் சிங் யாதவின் பேரன் ஆவார். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் முலாயமின் கோட்டையான மைன்பூரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர்.
இந்தத் திருமணத்தின் மூலம் முலாயம் மற்றும் லாலுவின் கட்சிகளும் இணையும் என்று தெரிகிறது. ஏற்கனவே இருவரும் ஜனதாதளத்தை மீண்டும் உருவாக்கப் போவதாக கூறியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். மேலும் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து போனவர்களையும் இணைக்க இருவரும் முயன்று வருகின்றனர்.
முலாயமும், லாலுவும் 90களின் இறுதியில் பிரிந்து போனார்கள். 1997ம் ஆண்டு ஐக்கிய முன்னணி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைத்தபோது பிரதமர் பதவிக்கு முலாயம் முயன்றார். ஆனால் அதை லாலுதான் முறியடித்து விட்டார். இதை பகிரங்கமாகவே கூறி வருத்தம் வெளியிட்டவர் முலாயம்.
தற்போது பாஜக இந்தியாவைப் பிடித்து விட்டதால் மீண்டும் ஒரு பொற்காலத்தை உருவாக்கும் வகையில் லாலு, முலாயம், நிதீஷ் குமார் உள்ளிட்டோர் இணைய முடிவு செய்து அதற்கேற்ப செயல்பட ஆரம்பித்துள்ளனர். பாஜகவை பின்னுக்குத் தள்ள மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் இவர்கள் பேசி வருகின்றனர். முன்னோட்டமாக உ.பி, பீகாரில் இணைந்து செயல்பட்டு பாஜகவை வீழ்த்த இவர்கள் உத்தேசித்து செயல்பட்டு வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.
இவர்களின் முயற்சி வெற்றி பெற்றால், அனைத்து ஜனதாதள பிரிவுகளும் ஒன்றிணைந்து மீண்டும் ஒருங்கிணைந்த ஜனதாதளம் உருவெடுக்கும். அது நிச்சயம் வட மாநில அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.