ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை தகவல்
டெல்லி: சியாச்சின் பனிச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.
சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு 25 அடி ஆழ பனியில் இருந்து மீட்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமாவில் இருக்கும் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
மைனஸ் 40 டிகிரி குளிரில் 6 நாட்களாக இருந்ததால் அவரது உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்துவிட்டதால் கோமா நிலையில் இருக்கிறார். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் " உயிர்காக்கும் மருத்துவ முறைகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் ஹனுமந்தப்பாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனுமந்தப்பாவிற்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிகையில் " ஹனுமந்தப்பாவின் மூளைக்கு பிராண வாயு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. பல உடல் உறுப்புகள் செயல் இழந்து உள்ள நிலையில் அவற்றின் செயல்பாட்டில் எவ்வித முனேற்றமும் இல்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்திற்காக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா குணமடைய வேண்டும் என்று தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது.