பணப்புழக்கத்தில் பாதி கருப்பு பணம்தான்.. ரொக்கமற்ற வணிகமே தீர்வு: மோடி
டெல்லி: ஊழல் மற்றும் கருப்புப் பணம் மூலமே அதிக பணப் புழக்கம் நடக்கிறது என்றும் இதனால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை பின்பற்றி வலுவான இந்தியாவை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
21-வது நூற்றாண்டில் ஊழலுக்கு இடமில்லை என்ற நிலையினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி லிங்கிடுஇன் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது:ஊழல் நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்கிறது என்றும், ஏழை-எளிய நடுத்தர மக்களின் கனவுகளை சிதைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். நாட்டில் அதிக அளவில் ஊழல் மற்றும் கருப்புப் பணம் புழக்கத்தில் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதனை ஒழிக்கவே 500, 1000 ரூபாய் பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே ரொக்கமில்லாத பரிவர்த்தனைக்கு தாம் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பின்பற்ற அனைத்து மக்களும் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மோடி, குறிப்பாக இளைஞர்கள் இந்த நடவடிக்கையை பின்பற்றுமாறு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போது நடமாடும் வங்கிகள் மற்றும் மொபைல் பண காலத்தில் வாழ்ந்து இருக்கிறோம். மேலும், அனைத்து நடவடிக்கைகளையும் மொபைல் மூலமே செய்து வருகிறோம். அதாவது, உணவுப் பொருள்கள், வாடகை வாகன பதிவு, வீட்டு உபயோகப் பொருள்கள் கொள்முதல் என அனைத்தும் கைப்பேசி மூலமே ஆர்டர் செய்து வருகிறோம். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து நமது வாழ்க்கை மிக சௌகரியமாக மாறியிருக்கிறது. ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிக் கடன் அட்டைகளும் கிடைக்கின்றன. எனவே, உங்களில் பெரும்பாலானவர்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றீர்கள் என தான் நம்புகின்றேன். அதனால்தான் உங்களிடம் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வழிகள் குறித்து பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்று மோடி கூறியிருக்கிறார்.
நவம்பர் 8 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு சிறு வணிகர்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை வழக்க நல்லதொரு வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது வணிக சமூகம் தங்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு என்றும், அவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை பின்பற்றி செழிப்படைய இயலும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என அறிவிக்கும் போது இதனால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பார்கள் என்பதை தான் அறிவேன் என்றும், இருப்பினும் இந்த குறுகிய கால இடர்களை நீண்டகால பலன் கருதி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். நாட்டின் வளர்ச்சி நீண்ட கால நலன் கருதி இந்தக் குறுகிய கால இன்னல்களை ஏற்றுக் கொண்டுள்ள மக்களை நினைத்து தாம் சந்தோசப்படுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் கோவா பஞ்சாப் கர்நாடக மாநிலங்களில் சமீபத்தில் ஊரக மக்களைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது அவர்களிடம் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்று கேட்டதற்கு மிகவும் சப்தத்துடன் ஆம் என்று அவர்கள் கூறியதாகவும் மோடி அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாததால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த நவம்பர் 8-ம் தேதி இந்தியாவில் மொத்தமாக ரூ.15.44 லட்சம் கோடி (ரூ.8.58 லட்சம் கோடி அளவுக்கு 500 ரூபாய் நோட்டுகளும், ரூ.6.86 லட்சம் கோடி 1000 ரூபாய் நோட்டுகளும்) புழக்கத்தில் இருந்தன.
அதே சமயம், இந்த அறிவிப்பு வெளியாகி சரியாக 20 நாட்களில், அதாவது நவம்பர் 28-ம் தேதி வரை பொது மக்களிடம் இருந்து வங்கிகளுக்கு வெறும் 8.45 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னமும் 30 நாட்கள் இருக்கிறது என்றாலும், அதில் சுமாராக ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே வங்கிகளுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்பார்த்த மிகப்பெரிய கருப்புப் பணம் எங்கே போனது? கருப்புப் பணம் வைத்திருப்போர் அதனை மாற்றாமலேயே விடப்போகிறார்களா? இல்லை முன்னமே அது வங்கிகளில் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுவிட்டதா? என பல்வேறு கேள்விகளை மத்திய அரசு வட்டாரங்கள் தங்களை தாங்களே கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.