இப்படி அப்பட்டமாக சட்டத்தை மீறுகிறாரே சசிகலா.. தக்க பாடம் கிடைப்பது எப்போ?
சட்டத்தை அப்பட்டமாக மீறுவதை சர்வ சாதாரணமாக கருதும் சசிகலாவுக்கு தக்க பாடம் எப்போது கிடைக்குமோ? என்பது பொதுமக்களின் கேள்வி.
சென்னை: பெங்களூரு சிறைக்குள்ளும் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து தொடர்ந்து சட்டத்தை மீறுவதை சர்வ சாதாரணமாக கருதும் சசிகலாவுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
முதல்வர் நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்த 1991-ம் ஆண்டு முதல் அதிகாரத்தை திரைமறைவில் இருந்து கண்டு ருசித்தவர் சசிகலா. அதிகாரம் கிடைத்த மமதையில் சசிகலா 1991-96 கால கட்டத்தில் ஆடிய ஆட்டங்களை தமிழகமே கண்டு நொந்து போனது.
ஜெயலலிதாவுக்குப் பின்னால் மறைந்து கொண்டு சொகுசாக சட்டத்தை மீறும் நுணுக்கங்களில் கற்றுத் தேர்ந்தவராக விஸ்வரூபமெடுத்தார். இதற்குதான் 1996-ம் ஆண்டு தமிழக மக்கள் மரண அடி கொடுத்தார்கள்.
ருசி கண்ட பூனை
ஆனால் அதிகாரத்தை ருசி கண்டுவிட்ட பூனை கால் நூற்றாண்டு காலமாக விடாது ருசித்தது. ஒருகட்டத்தில் ஜெயலலிதா மறைந்துவிட, எந்த தகுதியுமே இல்லை என தெரிந்தும் பண பலம், அடியாள் பலம் மூலம் அதிகாரத்தை நேரடியாக கைப்பற்ற முயற்சித்தார்.
எம்.எல்.ஏக்களுக்கு சிறை
சட்டவிரோதம் எனத் தெரிந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை குண்டர்களின் கட்டுப்பாட்டில் சிறை வைத்தார். சிறைக்கு போவோம் எனத் தெரிந்தும் ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என வெறிபிடித்தவராக அலைந்தார்.
சிறைக்கு போய் திருந்தவில்லை
ஆனால் உச்சநீதிமன்றம் சிறைக்கு துரத்திவிட்டது... சிறைக்குள் போயும் சசிகலா திருந்தியபாடில்லை என்பதைத்தான் அவரது சொகுசு வாழ்க்கை அம்பலமாக்கியுள்ளது. சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை லஞ்சமாக வாரி இறைத்து சட்டவிரோத செயல்களை துணிந்தே செய்திருக்கிறார் சசிகலா.
பணம் வாரியிறைப்பு
அரசாங்கத்து சொத்துகளையே ஆட்டைய போட்ட சசிகலா கோஷ்டிக்கு இதெல்லாம் கால்தூசிதான்... ஊழல் செய்து சொத்து குவித்து சிறைக்கு போய் தண்டனை அனுபவிக்கிறோமே என்கிற கூச்சம் கொஞ்சமும் இல்லாமல் பணத்தால் விளையாடியிருக்கிறார் சசிகலா.
கடும் தண்டனை தேவை
இவர்களுக்கெல்லாம் 4 ஆண்டு சிறை தண்டனை என்பதெல்லாம் சர்வ சாதாரணம்... இத்தகையவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.