சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு காத்திருக்கிறது சாட்டையடி.. மாஜி நீதிபதி ஏ.கே.கங்குலி எச்சரிக்கை
டெல்லி: காவிரி விவகார்தில் கர்நாடக அரசு செயல்படும் விதம் மிகத் தவறானது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி நடப்பது சரியல்ல. இதை சுப்ரீம் கோர்ட் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஏ.கே.கங்குலி எச்சரித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவிட்டு விட்டால் அதை யாரும் மீற முடியாது. குறிப்பாக மத்திய அரசும், மாநில அரசுகளும் அதை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். அதிலிருந்து மீறுவது என்பது மிகக் கடுமையான குற்றமாகும் என்றும் கங்குலி எச்சரித்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் தொடர்ந்து முரண்பாடாக செயல்பட்டு வருவது குறித்தும், காவிரி நீரை திறப்பதை நிறுத்தி விட்டது குறித்தும் கங்குலி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நீர் திறக்க மறுப்பு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 27-ம் தேதி வரை 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கடைசியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தற்காலிக உத்தரவுதான். ஆனால் இதையே கர்நாடகம் ஏற்க மறுத்து பிடிவாதமாக செயல்பட்டு வருகிறது.
சட்டசபையைக் கூட்டி தீர்மானம்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதில் பெங்களூர் மற்றும் கர்நாடக காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு குடிநீருக்கு மட்டும்தான் காவிரி நீரைப் பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் போட்டுள்ளனர்.
அப்பட்டமாக எதிர்க்கும் செயல்
கர்நாடக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் உச்சநீதிமன்றத்தை அப்பட்டமாக எதிர்க்கும் செயல் என்று பல்வேறு சட்ட வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர். கர்நாடகம் தேவையில்லாமல் உச்சநீதிமன்றத்தைத் தீண்டி விட்டதாகவே அனைவரும் சொல்கிறார்கள்.
கடுமையான தண்டனை உறுதி
செப்டம்பர் 27ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் காவிரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக அரசுக்கு மிகக் கடுமையான தண்டனை கண்டிப்பாக காத்திருக்கிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஏ.கே.கங்குலி கண்டனம்
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்த ஏ.கே. கங்குலியும் கர்நாடகத்தின் செயலைக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில் இது தவறான போக்கு. இப்படி செய்யக் கூடாது.
யாரும் மீறக் கூடாது
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் அதை யாரும் மீறக் கூடாது, மீறவும் முடியாது. அதற்கு எதிராக மசோதா கொண்டு வர முடியாது, தீர்மான் போட முடியாது. எதுவுமே செய்யக் கூடாது. எது செய்தாலும் அது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகவே அமையும்.
உச்சநீதிமன்றம் சும்மா இருக்காது
தனது உத்தரவு மீறப்படுவதை உச்சநீதிமன்றம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்காது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். தீவிரமாக இதை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் கங்குலி.