இரையைத் தேடி மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை பரிதாப பலி... தெலுங்கானாவில் அதிர்ச்சி
தெலுங்கானாவில் இரையைத் தேடி மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: இரையைத் தேடி மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியான சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லரம் வனப் பகுதியில் இந்த சம்பவம் நிகழந்துள்ளது. ஒரு சிறுத்தை வழித்தவறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. இதனையடுத்து உள்ளூர்வாசிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே, மரம் என்று நினைத்து அங்குள்ள மின் கம்பத்தில் சிறுத்தை ஏறியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து, மின்கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தையின் உடலை கீழே இறக்கினர்.
இந்த சிறுத்தையானது உணவு தேடி காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்ததாகவும், இரையை பிடிக்க மின்கம்பத்தை மரம் என்று நினைத்து ஏறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்து போன சிறுத்தையைக் காண மக்கள் திரண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.