ஜல்லிக்கட்டு தடையை நீக்குங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிப்பு
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க கோரும் வழக்கில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை நீக்கி மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் அவசியம் குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டுத் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் இறுதி விசாரணை இம்மாதம் 30ம் தேதி தொடங்கும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இன்று கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
500 பக்கங்கள் கொண்ட இந்த 4 ஆவணத்தொகுப்பை அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுடன், 2012, 2013 மற்றும் 2014ல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளின் விவரங்கள், நடந்த போட்டிகளின் விவரங்கள், 2014-க்குப் பிறகு ஜல்லிக்கட்டு மாடுகளின் மோசமான நிலைமை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உரிய வழிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக வழிமுறைகள் வகுக்கப்படும்போது அதனை முழுமையாக ஏற்க தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.