மக்களவையில் தொடர் அமளி: 25 காங்கிரஸ் எம்.பிக்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட்- சபாநாயகர் அதிரடி உத்தரவு
டெல்லி: லோக்சபா நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வந்ததாக 25 காங்கிரஸ் எம்.பிக்களை 5 நாட்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், வியாபம் முறைகேடு, லலித் மோடிக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உதவியது போன்றவற்றை முன் வைத்து தர்ணா நடத்தி வருகின்றனர்.
சுமார் இரு வார காலமாகியும், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், அரசு எந்த அலுவலையும் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் காலமும், பணமும் வீணாகிக்கொண்டிருந்தது.
இந்நிலையில், இன்று, லலித் மோடி விவகாரம் பற்றி வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபாவில் சில விளக்கங்களை அளித்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதேபோல லோக்சபாவிலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கே வந்து சுஷ்மா, வசுந்தரா, ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கையில் பதாகைகளையும், கட்-அவுட்டுகளையும் ஏந்தி அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதற்காக, விதி எண் 374 (ஏ)-ன் கீழ், காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேரை தொடர்ந்து 5 நாட்களுக்கு அவையைவிட்டு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு, அவையை நாளைக்கு ஒத்திவைத்தார். முன்னதாக ராஜ்யசபாவும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா ஒத்தி வைக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் அவையை விட்டு சிறிது நேரம் வெளியேறவில்லை. பிற எதிர்க்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் உத்தரவு பற்றி ஆலோசித்து, அவர்களின் ஆதரவை கேட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில், இதுபோல எந்த ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நாடாளுமன்றம் கடும் நடவடிக்கை எடுத்ததில்லை. எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்றார். இடதுசாரி உறுப்பினர்கள் சிலரும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பியபோதிலும், அவர்கள் கையில் பதாகைகள் இல்லாததால், சஸ்பெண்ட் நடவடிக்கை அவர்கள் மீது பாயவில்லை.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் விவரம்: சந்திரப்பா, சன்டோக் சிங் சவுத்ரி, ஏஎச்கே.சவுத்ரி, சுஷ்மிதா தேவ், நினோக் எரிங், துருவநாராயணா, கவுரவ் கோகாய், சுகேந்தர் ரெட்டி, தீபேந்தர் ஹூடா, கோடிகுன்னில், முத்த ஹனுமந்தே கவுடா, அப்ஜித் முகர்ஜி, முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கே.எச்.முனியப்பா, பி.வி.நாயக், வின்சென்ட் பாலா, ராகவன், ரஞ்சித் ராஜன், சி.எல்.ருயாலா, சாஹு, ராஜீ சதவ், ரவ்னீத் சிங் கே சுரேஷ், கே.சி,வேணுகோபால் மற்றும் டி.மெனியா.