உலகத்தில் காதல் குறைந்து விட்டதா?
ஆக்ரா: காதலின் சின்னமாக வர்ணிக்கப்படும் தாஜ்மஹாலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டாண்டுக்கு குறைந்து வருகிறது.
உலக 7 அதிசயங்களில் ஒன்று ஆக்ராவிலுள்ள தாஜ்மகால், மனைவி மும்தாஜுக்காக, முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய இந்த கட்டிடம், காதலின் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. காதலர்கள் தங்களுக்குள் தாஜ்மஹால் பொம்மைகளை பரிசாக பரிமாறிக்கொள்வது முன்பு பேஷனாக இருந்தது.
இந்நிலையில், தாஜ்மஹாலை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக உத்தர பிரதேச மாநில சுர்றுலாத்துறை புள்ளி விவரம் கூறுகிறது. சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுற்றுலா துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங் அளித்துள்ள பதிலில் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.
அமைச்சர் கூறுகையில், 2012 மற்றும் 2013க்கு இடைப்பட்ட காலத்தில், தாஜ்மஹால் வரும் பயணிகள் எண்ணிக்கை 10 சதவீதம்வரை குறைந்தது. 2012ல் நாலரை லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை நான்கு லட்சமாக மட்டுமே இருந்தது. நடப்பாண்டிலும் 15 சதவீத வீழ்ச்சியை சுற்றுலா துறை பார்க்கிறது என்றார்.
தாஜ்மகஹால், இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. எனவே, தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளுக்காக, இ-டிக்கெட் முறையை நடைமுறைப் படுத்துமாறு கடந்த செவ்வாய்க்கிழமை, பிரதமர் மோடிக்கு, உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.