எஸ்ஐ செய்யும் வேலையா இது... சசிகலாவுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பப்பட்ட காய்கறி, பழம், சாப்பாடு!
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஆம்புலன்ஸில் காய்கறி, பழம், சாப்பாடு உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு உதவி ஆய்வாளர் ஒருவர் அமைச்சரின் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காய்கறி, பழங்கள், சாப்பாடு ஆகியவற்றை வழங்கியதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த புகாரின் பேரில் முதல்வர் உத்தரவின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் சிறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிக்கை தாக்கல்
இந்த குழுவின் அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உள்ளனர். இதன் பிறகு, தவறிழைத்த சிறைத்துறை அதிகாரிகள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் நேற்று ஒரு மொட்டை கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொட்டை கடுதாசி...
அந்த மொட்டை கடிதம் மாநில டிஜிபி முதல் எஸ்பி வரை அனுப்பப்பட்டுள்ளது. அதில் யாருடைய கையெழுத்தும் இல்லை. அந்த கடிதத்தில், கர்நாடகா மாநிலத்தில் தொழிலக பாதுகாப்பு படை இயங்கி வருகிறது. இந்த படையில் சப் இன்ஸ்பெக்டராக உள்ள கஜராஜ் மாகனூரு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
விஐபிகளுக்கு உதவி
அவர் தனக்கு ஒதுக்கிய பணியை செய்யாமல் சிறையில் உள்ள விஐபிகளுக்கு பணிவிடை செய்துள்ளார். சிறையில் உள்ள விஐபிகளுக்கு வீட்டு உணவு சப்ளை, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், பழங்கள், ஆகியவற்றை சப்ளை செய்து வந்தார்.
யார் யாருக்கு உதவிகள்
கருப்பு பண பதுக்கலில் கைதான வீரேந்திரா, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்த வழக்கில் கைதான கர்நாடக மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஜெயச்சந்திரா, இரும்பு தாது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்காராம் படேரியா ஆகியோருக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.
சசிகலாவுக்கு
கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்தது முதல் அவருக்கு வேண்டிய சகல வசதிகளையும் சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மூலமாக செய்து வந்தார். ஓசூரைச் சேர்ந்த அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய் கொடுத்தார். ஓசூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் சசிகலாவுக்கு எடுத்து வரும் சாப்பாடு, காய்கறிகள், பழங்கள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை சிறைக்கு உள்ளே சென்று சசிகலாவுக்கு வழங்கியுள்ளார். இதற்காக சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களுடன் மாகானூரு தொடர்பில் இருந்தார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.