பினாமி ஆட்சியை அகற்ற.. நியாயம் வழங்க.. ஜனாதிபதியிடம் மு.க ஸ்டாலின் புகார்
தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலைக்கு நியாயம் கேட்க ஜனாதிபதியை சந்திக்கப் போவதாகவும் அவர
டெல்லி: சட்டசபையில் திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து புகார் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழர்களும் எதிர்த்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்த ஆட்சியை சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் தமிழகத்தில் இருக்கிறது.
அதிமுகவினர் சட்டமன்றத்திலே பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஜனநாயகப் படுகொலையை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம். உயர்நீதிமன்றத்திற்கு சென்று நீதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். என்றாலும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட வேண்டும் என்று நாங்கள் நேரம் கேட்டிருந்தோம். இன்று மாலை அவர் எங்களுக்கு நேரம் ஒதுக்கித் தந்துள்ளார்.
அவரை மாலை சந்திக்கும்போது, சட்டசபையில் நடந்த விவரங்களை அவரிடம் தெரிவிக்க உள்ளோம். சட்டமன்றத்தில் முறையாக வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அதை முறைப்படுத்தி நியாயம் வழங்க, நீதி நிலைநாட்ட வேண்டுகோள் வைக்கப்படும்.
மு.க. ஸ்டாலினுடன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் உடன் சென்றுள்ளார். இவர்கள் இருவருடன் திமுக எம்பிக்களும் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.