கோப்புகளை கிடப்பில் போட்டால் தலைகீழாக தொங்கவிடுவேன்... அதிகாரிகளை எச்சரித்த அடடே முதல்வர்!
அரசு அலுவலகங்களில் கோப்புகளை கிடப்பில் போடும் அதிகாரிகளை தலைகீழாக தொங்கவிட்டுவிடுவேன் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: வழக்கமான வருவாய் துறை கோப்புகள் தொடர்பான பணிகளை முடிப்பதில் காலம் கடத்தும் அதிகாரிகள் தலை கீழாக தொங்கவிடப்படுவார்கள் என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் போபாலில் நடைபெற்றுள்ளது. அதில் பேசிய சிவராஜ் சிங் சவுகானிடம் பண்டல்காந்த் பிராந்தியத்தை சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகி ஒருவர், வருவாய் துறை தொடர்பான கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக புகார் தெரிவித்தார்.
எச்சரிக்கை
இந்த விவகாரத்தில் காலம் கடத்தப்படுவதை தடுக்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலையிட வேண்டும் என அந்த நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து வருவாய் துறை கோப்புகள் தொடர்பான பணிகளை முடிப்பதில் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் தலை கீழாக தொங்க விடப்படுவார்கள் என்று சவுகான் எச்சரித்துள்ளார்.
விமர்சனம்
உயர் அதிகாரிகளை மிரட்ட சவுகான் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதை காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது. பா.ஜக அரசு ம.பியில் தன்னுடைய தோல்வியை, அதிகாரிகள் பக்கம் திசை திருப்புவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு அவருடைய விரக்தியையே காட்டுகிறது என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Recommended Video
மறுப்பு
ஆனால் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது அந்த மாநில பாஜக. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜ்நிஷ் அகர்வால் "விவசாயிகள் பிரச்சனையில் நடவடிக்கையில் எடுப்பதில் முதல்வர் தீவிரமாக உள்ளார்.
விவசாயிகள் நலனுக்காக
விவசாயிகளின் வருவாய் தொடர்பான கோப்புகளை நீண்ட காலமாக நிலுவையில் வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடர்பாக மட்டுமே முதல்வர் பேசினார்," என்றும் கூறினார். எனினும் அதிகாரிகள் வெளிப்படையாக எச்சரித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.