மகாராஷ்டிரா, ஹரியானா - சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மும்பை: மகாரஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
இந்தத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏற்கனவே பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பதால் பாஜகவினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இரு மாநிலங்களிலும் கடந்த பல வருடங்களாகவே காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்து வருகிறது. இங்கு தற்போது பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்படும் போலத் தெரிகிறது.
மோடி அலை இருக்கிறது என்பதை நிரூபிக்க இந்த வெற்றி உதவும் என்பது பாஜகவினரின் எண்ணமாகும். காரணம், சமீபத்தில் நடந்த சில இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. எனவே பாஜகவினருக்கு இந்த வெற்றி முக்கியமானதாகும்.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கு இதுவரை சிவசேனாவுடன் வைத்திருந்த கூட்டணியை முறித்து விட்டு பாஜக தனித்துப் போட்டியிட்டுள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக பாதி தொகுதிகள் வரை பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது இங்கு அது தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்குமாம்.
அதேபோல 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானாவில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹரியானாவில் அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 73 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் 62 சதவீத வாக்குப் பதிவு நடந்தது.