மகாராஷ்டிரா சட்டசபை இடைத்தேர்தல்: தஸ்கோவன் தொகுதியில் தேசியவாத காங். வெற்றி!
மும்பை: மகராஷ்டிராவில் தஸ்கோவன் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சுமன் பாட்டீல் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் தஸ்கோவன் மற்றும் பந்த்ரா கிழக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தஸ்கோவனில் மறைந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டீல் மனைவி சுமன் பாட்டீல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரதான கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை.
இத்தொகுதியில் சுமார் 1.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுமன் பாட்டீல் வென்றுள்ளார். இதேபோல் பந்த்ரா கிழக்கு தொகுதியில் சிவசேனா வேட்பாளர் திருப்தி சாவந்த் தம்மை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நாராயணன் ரானேவை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் நாரயண் ரானே தோல்வியைத் தழுவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.