ப.சிதம்பரத்தால் மீண்டும் வாய்ப்பை பறிகொடுத்த மகாராஷ்டிரா காங். எம்.பி. பாஜகவில் ஐக்கியமாகிறார்
மும்பை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் மீண்டும் எம்.பி.யாகும் வாய்ப்பை பறிகொடுத்த மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவர் விஜய் தார்தா, பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவின் 57 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 11-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸின் ஈட்வர்லால் ஜெயின், பிரபுல் படேல், காங்கிரஸின் விஜய் தார்தா, அவினாஷ் பாண்டே, பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சிவசேனாவின் சஞ்சய் ரவுத் ஆகியோரும் அடங்குவர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் திடீரென அறிவித்தது.
மகாராஷ்டிரா சட்டசபையில் காங்கிரஸுக்கு 42, தேசியவாத காங்கிரஸுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. ஆகையால் இரு கட்சிகளுமே தலா 1 ராஜ்யசபா எம்.பி.யை மட்டுமே நிறுத்த முடியும். காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பரம் வெற்றி பெறுவதி உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பால் தமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோனதாக கருதிய ராஜ்யசபா எம்.பி. விஜய் தார்தா, நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை திடீரென சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தார்தா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது என்று மட்டும் கூறினார். அவர் பாஜகவில் இணைய போகிறாரா? அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக உதவியுடன் வளைக்கப் போகிறாரா? என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதனிடையே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரத்தை மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளது சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.