மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவாண் ராஜினாமா- ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது!!
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரித்விராஜ் சவாண் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது.
இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது.
வாபஸ் கடிதம் கொடுத்த தேசியவாத காங்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் சட்டசபை கட்சி தலைவரும், துணை முதல்வருமான அஜித்பவார் நேற்று இரவு கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார்.
அப்போது பிரித்விராஜ் சவாண் அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதற்கான கடிதத்தை அவர் கொடுத்தார். இதனால் பிரித்விராஜ் சவாண் அரசு பெரும்பான்மையை இழந்தது.
ஆளுநர் தீவிர ஆலோசனை
இதனைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஆளுநருடன் ஆலோசனை
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா சட்டசபை எதிர்கட்சி தலைவருமான எக்னாத் காட்சே இன்று ஆளுநர் சி. வித்யாசகர் ராவை பிற்பகல் சந்தித்தார்.
டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
அப்போது ஆட்சி செய்ய போதிய பலம் இல்லாததால் பிரிதிவிராஜ் தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கடிதம் ஒன்றையும் வழங்கினார். மேலும் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
மேலும் முதல்வர் பிரித்விராஜ் சவாணும் கவர்னரை இன்று சந்தித்தார். முதலில் இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறப்பட்டது.
ராஜினாமா
பின்னர் சில மணிநேரத்தில் முதல்வர் பிரித்விராஜ் சவாண், தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை மீண்டும் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
ஜனாதிபதி ஆட்சி அமல்...
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.