தொடர் கொலை மிரட்டல்... அண்ணா ஹசாரேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
மும்பை: சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு தொடர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
அண்ணா ஹசாரேவுக்கு நேற்று முன்தினம் மகாராஷ்டிர மாநிலம், லட்டூர் மாவட்டத்தில் இருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இதில் 2 ஆண்டுகளுக்கு முன் புனேவில் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தாபோல்கருக்கு ஏற்பட்ட கதிதான் ஹசாரேவுக்கும் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.
இக்கடிதம் தொடர்பாக அகமதுநகரின் பார்னர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல் ஹசாரேவுக்கு 15 நாட்களுக்கு முன் வந்த கடிதத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் தொடர்பை துண்டித்துக் கொள்ளாவிடில் நீங்கள் கொல்லப்படுவது உறுதி என்று ஹசாரேவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மிரட்டல்கள் குறித்து ஹசாரே கூறும்போது, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனது பணிகளை தொடர்ந்து செய்வேன் என்றார்.