டாக்டர் அம்பேத்கரின் லண்டன் வீடு விற்பனைக்கு – ஏலத்தில் எடுக்க மகாராஷ்டிரா அரசு ஆர்வம்!
மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் காரணகர்த்தாவான டாக்டர் அம்பேத்கர் லண்டனில் வசித்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது.
அதனை ஏலத்தில் எடுக்க மகராஷ்டிர அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவ்வீட்டினை ஏலத்தில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசை, அந்த மாநில நீர்ப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின் ராவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
லண்டனில் பொருளாதாரம்:
லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் அம்பேத்கர் பயின்றபோது, அங்கு ஹென்றி சாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வீடு:
அம்பேத்கர் வாழ்ந்த அந்த வீடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். சுமார் 2,050 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 40 கோடியாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து பூர்வ அனுமதி:
அந்த வீட்டை வாங்குவதற்கு மாநில சமூக நீதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. முதல்வர் பிருத்விராஜ் சவுகானும் இந்த நோக்கத்துக்கு ஆதரவாக உள்ளார்.
பிரிட்டன் ஆதரவாளர்கள் கடிதம்:
இந்த ஏலத்தை தெரியப்படுத்தும் விதமாக பிரிட்டனில் உள்ள அம்பேத்கர் ஆதரவாளர்களின் கூட்டமைப்பு மத்திய, மகாராஷ்டிர அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.