வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்கர்ட் அணியக் கூடாது... இது மத்திய அமைச்சரின் அட்வைஸ்
ஆக்ரா: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்கர்ட் அணியக் கூடாது என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்று செய்தியாளர்களிடம் மகேஷ் ஷர்மா கூறியதாவது:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவ 1363 என்ற ஹெல்ப்லைன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களில் வந்து இறங்கும்போது அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் போது செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் தொடர்பாக ஒரு துண்டறிக்கை கொடுக்கப்படும்.
அதில் சிறிய நகரங்களில் இரவு நேரங்களில் தனியே நடமாட கூடாது; ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிய கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர்கள் பயணிக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மகேஷ் ஷர்மா கூறினார்.
அப்போது, இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஸ்கர்ட் அணியக் கூடாது எனில் அவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்... இதற்கு பதிலளித்த மகேஷ் ஷர்மா, அப்படி எந்த ஒரு உடை கட்டுப்பாடும் விதிக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று மழுப்பினார்.