ஐஸ்கிரீம் கடைக்காரருக்கு அடி... மலையாள பட வில்லன் "பீமன்" ரகு போலீஸ் வழக்கு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பேக்கரிக் கடையில் ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பிரபல மலையாளப் பட வில்லன் நடிகர் "பீமன்" ரகு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது நண்பர் விஷ்ணு என்பவர் மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.
பீமன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் ரகு. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது பெயர் பீமன் ரகு என்று மாறியது. மலையாளத்தில் வில்லன் நடிகராக கலக்கியவர் ரகு. நடிக்க வரும் முன்பு போலீஸ்காராக இருந்தவர் ரகு.
மலையாள பலான படங்கள் பலவற்றில் பலாத்கார காட்சிகளில் இவரைக் காணலாம். தற்போது 62 வயதாகும் ரகு காமெடி ரோல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் ஒரு பஞ்சாயத்தில் சிக்கியுள்ளார் ரகு.
ஐஸ்கிரீ்ம் சண்டை
பீமன் ரகு தனது நண்பர் விஷ்ணுவுடன் ஐஸ்கிரீம் சீப்பிடுவதற்காக திருவனந்தபுரம், மரத்துங்குழி என்ற இடத்தில் உள்ள பேக்கரிக்குச் சென்றுள்ளார்.
ஐஸ்கிரீம் கொண்டு வா
காரில் சென்ற அவர்கள் காரை விட்டு இறங்காமலேயே ஐஸ்கிரீமுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரீம் வரவில்லை. திரும்பத் திரும்பச் சொல்லியும் ஐஸ்கிரீம் வரவில்லை.
பேக்கரிக் கடைக்காரருக்கு அடி
இதனால் கோபமடைந்த ரகுவும், விஷ்ணுவும் காரை விட்டு இறங்கி கடைக்காரர் சுகேஷ் என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் சேர்ந்து சுகேஷைத் தாக்கியதாக தெரிகிறது.
போலீஸில் புகார்
பதிலுக்கு சுகேஷும், திருப்பித் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அந்த இடமே போர்க்களமானது. இதையடுத்து சுகேஷ் தரப்பில் வட்டியூர்காவு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
போலீஸ் வழக்குப் பதிவு
இதையடுத்து இன்று காலை வட்டியூர்காவு போலீஸார், பீமன் ரகு மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.