மைசூரில் அமெரிக்க மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவமனை ஊழியர் கைது!
மைசூரு: மைசூரு தனியார் மருத்துவமனையில் அமெரிக்க மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக செவிலியரான வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10 பேர் கொண்ட குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூருவுக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் மைசூரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.
இந்த நிலையில் சுற்றுலா வந்திருந்த ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சக நண்பர்கள் அந்த மாணவியை மைசூரு டவுன் என்.ஆர்.மொகல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவிக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது.
பலாத்காரம் செய்ய முயற்சி:
இந்த மருத்துவமனையில் மண்டியா மாவட்டம் கே.எம்.தொட்டி அருகே நெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுமித் என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே நள்ளிரவில் அமெரிக்க மாணவியிடம் சுமித் தகாத வார்த்தையில் பேசி, அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
கூச்சல் போட்ட மாணவி:
இதனால் மாணவி கூச்சல் போட்டுள்ளார். இதைதொடர்ந்து சுமித் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி, என்.ஆர்.மொகல்லா போலீசில் புகார் செய்தார்.
அமெரிக்க மாணவி:
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான சுமித் மீது அமெரிக்க நாட்டை சேர்ந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விரைவில் மருத்துவ பரிசோதனை:
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கும், கைதான சுமித்திற்கும் மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக வந்த அமெரிக்க மாணவியை மருத்துவமனை செவிலியர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.