மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: சாமியார் சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன்!
மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுக்கு மும்பை ஹைகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பை: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுக்கு மும்பை ஹைகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு இரட்டை வெடிகுண்டு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இ்ந்த வழக்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்திவந்தது. இந்நிலையில் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் கடந்த 2011-இல் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வந்த நிலையில் சாத்வி பிரக்யா உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டை என்ஐஏ கைவிட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
தன் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டதை அடுத்து தனக்கு ஜாமீன் வழங்க விசாரணை நீதிமன்றத்தில் சாத்வி மனு தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டதால் மும்பை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவானது நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் ஷாலினி பன்சால்கர் ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சாத்விக்கு ரூ.5 லட்சம் பிணையின் பேரில் ஜாமீன் வழங்கப்படுவதாகவும், அவர் தனது பாஸ்போர்ட்டை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.