வரதட்சணை வாங்கி வராத மனைவியின் முடி, மூக்கை வெட்டிய நபர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 34 வயது நபர் ஒருவர் வரதட்சணை தொடர்பாக தனது மனைவியின் முடி மற்றும் மூக்கை வெட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள அகமதுபூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆலம்(34). அவரது மனைவி ருபினா. பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வா என்று கூறி ஆலம் தனது மனைவியை தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
அவர் ரூ.20 ஆயிரம் ரொக்கமும், ஒரு பைக்கும் வரதட்சணையாக வாங்கி வருமாறு ருபினாவிடம் தெரிவித்துள்ளார். ருபினா வரதட்சணை வாங்கி வராத கோபத்தில் ஆலம் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆலம் கத்தரிக்கோலை எடுத்து ருபினாவின் தலைமுடி மற்றும் மூக்கை வெட்டிவிட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார். படுகாயம் அடைந்த ருபினாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ருபினாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆலமை தேடி வருகிறார்கள்.