டாமி சிங் த/பெ சேரி சிங்... நாய்க்கு ஆதார் கார்டு எடுத்த குறும்புக்கார ம.பி. ஆசாமி கைது!
போபால்: மத்திய பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் கார்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய குடிமகன் என்ற முறையில் அரசு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் அடைய ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், ஆதார் கார்டு வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில மாநிலங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிண்ட் மாவட்டத்தில் உள்ள உம்ரி நகரில் உரிய நேரத்தில் ஆதார் அட்டைகள் வழங்கப் படவில்லை என புகார் கூறப்பட்டது.
இதேபோல் சிலர் நாய்கள் உள்பட செல்லப்பிராணிகளுக்கும் ஆதார் அட்டை எடுத்து வைத்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்த அகிலேஷ் சிங் யாதவ் என்பர் போலீஸ் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அசாம் கான் என்ற 35 வயது நபர் தனது நாய்க்கு ஆதார் கார்டு எடுத்தது உறுதியானது. அசாம் கான் உமரி ஆதார கார்டு மையத்தில் கண்காணிப்பு பணியினை செய்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து நாயின் ஆதார் அட்டையைப் பறிமுதல் செய்த போலீசார், அசாம் கானையும் கைது செய்தனர்.
நாயின் புகைப்படத்துடன் கூடிய அந்த அட்டையில் பெயர்: டாமி சிங், தந்தையின் பெயர்: ஷேரு சிங், பிறந்த தேதி: 26-11-2009, பாலினம்: ஆண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அசாம் கான் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உம்ரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதே போன்று பிற விலங்குகளுக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டதா என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட அசாம்கான் சமீபகாலமாக குடும்பப் பிரச்சினை காரணமாக மனதளவில் பாதிக்கப் பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.