பக்கத்து வீட்டில் சாப்பிட்ட 6 வயது சிறுவனை அடித்துக் கொன்ற வளர்ப்புத் தந்தை
மதுரா: பக்கத்து வீட்டில் உணவு வாங்கிச் சாப்பிட்டதற்காக ஆறு வயது சிறுவனை அடித்துக் கொன்ற வளர்ப்புத் தந்தையைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் கிரிராஜ் வாடிகா காலனியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் தர்மேந்திரா. இச்சிறுவனின் தாயாரின் ஆண் நண்பர் ராஜேந்திரா. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று தர்மேந்திராவின் தாயார் வெளியூர் சென்றிருந்தார். எனவே, சாப்பாடு தர ஆள் இல்லாததால், பக்கத்து வீட்டில் உணவு வாங்கிச் சாப்பிட்டுள்ளான் தர்மேந்திரா. இதைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த ராஜேந்திரா, அச்சிறுவனை கம்பால் பயங்கரமாக அடித்துள்ளார்.
வலி பொறுக்க முடியாமல் அழுதபடியே உறங்கிப் போயுள்ளான் தர்மேந்திரா. காலையில் வெகுநேரமாகியும் தர்மேந்திரா எழுந்திருக்காததால், அவனை எழுப்பியுள்ளனர். அப்போதும் அசைவற்று கிடந்ததால், உடனடியாக அச்சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், தர்மேந்திரா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து ராஜேந்திரா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அதன் முடிவுகள் தெரிந்த பின்னரே, இந்த வழக்கு குறித்து தெளிவான விவரங்கள் தெரிய வரும்.