போதையில் வந்த மனைவியை அடித்துக் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை - டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த மனைவியை அடித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வினோத் குமார், கடந்த 2004ம் ஆண்டு சுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில், சுமிதாவின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதை வினோத் உணர்ந்தார்.
2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலையில் இருந்து வீடு திரும்பிய வினோத், சுமிதா வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்பிய சுமிதா மது போதையில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத், சுமிதாவை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமிதாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வினோத் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வினோத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி விமல் குமார் யாதவ் உத்தரவிட்டார்.
மேலும், ‘இந்தக் கொலையில் திட்டமிட்ட சதியோ, முன்திட்டமோ, மனைவியை கொன்றுவிட வேண்டும் என்ற வன்மமோ இருந்ததாக தெரியவில்லை. வீட்டை விட்டுச் சென்ற மனைவி இரவு 10 மணிக்கு மேல் குடிபோதையில் வீடு திரும்பியதை கண்டு உணர்ச்சிவசப்பட்ட குற்றவாளி, எவ்வித ஆயுதத்தையும் உபயோகிக்காமல் மனைவியை ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாகவே இவ்வழக்கை கருத வேண்டியுள்ளது.
எனவே கொல்ல வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் உயிருக்கு காயங்களின் மூலம் தீங்கு விளைவிக்கும் குற்றமாக இதைக் கருதி குற்றவாளிக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது' என தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, இதுபோன்ற சூழ்நிலையில் கணவன் ஆத்திரப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. எனினும், இத்தகைய கொடூர தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் சற்று சிந்தித்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.