கள்ளக்காதலி, 5 வயது மகளை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய பேங்க் மேனேஜர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வங்கி மேனேஜர் ஒருவர் தனது கள்ளக் காதலி மற்றும் அவரின் 5 வயது மகளை கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி மூன்று பைகளில் போட்டு அதை ஆற்றில் போடுகையில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மேனேஜர் சமரேஷ் சர்கார்(47). அதே பகுதியில் தனது 5 வயது மகள் தீபஞ்சனாவுடன் வசித்து வந்தவர் சுசிதா சக்ரபர்த்தி(34). கணவரைப் பிரிந்து வாழ்ந்த அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகளின் தந்தையான சமரேஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுசிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சமரேஷை வலியுறுத்தி வந்துள்ளார். நேற்று சமரேஷ் சுசிதாவின் வீட்டிற்கு சென்றபோது திருமணம் தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமரேஷ் தாயையும், மகளையும் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி 3 பைகளில் போட்டு அவற்றை ஹூக்ளி ஆற்றில் போட சென்றார்.
படகில் மூன்று பைகளுடன் ஏறிய அவர் ஒரு பையை ஆற்றில் போட்டார். மீதமுள்ள பைகளை ஆற்றில் போடும் முன்பு படகில் இருந்த சக பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து பையை திறந்து பார்த்தபோது அவற்றில் ஒரு பெண் மற்றும் சிறுமியின் உடல் துண்டு, துண்டாக இருந்தது. மேலும் ஆற்றில் வீசப்பட்ட பையையும் போலீசார் மீட்டனர். இது குறித்து சமரேஷை போலீசார் கைது செய்தனர்.
சமரேஷ் போலீசாரிடம் கூறுகையில், சுசிதா தனது மகளை நீரில் முக்கி கொலை செய்து, தன்னுடைய கழுத்தை கத்தியால் அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார். யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாது என்று நான் அவர்களின் உடல்களை வெட்டி ஆற்றில் வீச முயன்றபோது சிக்கினேன் என்றார்.