உ.பி.யில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியவருக்கு அபராதம்!!!
மீரட்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக ஒருவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ஹஸன்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். அப்போது சைலேந்தர் சிங்(43) என்பவர் அந்த வழியாக மாருதி ஸ்விப்ட் காரில் வந்துள்ளார்.
அவரது காரை வழிமறித்த போக்குவரத்து போலீஸ்காரர் சிவராஜ் சிங் அவர் ஏன் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுகிறார் என்று கேட்டுள்ளார். கார் ஓட்டுவதற்கு எதற்கு சார் ஹெல்மெட் பைக்கிற்கு தானே தேவை என சைலேந்தர் தெரிவித்துள்ளார்.
அதற்கு போலீஸ்காரரோ ஹெல்மெட் அணியாமல் காரை ஓட்டிய குற்றத்திற்காக சைலேந்தர் சிங்கிற்கு அபராதம் விதித்து சலான் அளித்துள்ளார். சலானில் சைலேந்தர் சிங்கின் கார் பதிவு எண்ணை வேறு குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சைலேந்தர் போக்குவரத்து துறை எஸ்.பி. டி.சி. துபேயை சந்தித்து புதார் அளித்துள்ளார். இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துபே தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவராஜ் கூறுகையில்,
சைலேந்தர் செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டி வந்தார். செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியதற்கு அபராதம் விதித்து சலான் அளிக்குமாறு நான் போக்குவரத்து போலீஸ்காரர் பச்சன் சிங்கிடம் தெரிவித்தேன். அவர் தவறுதலாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்துவிட்டார் என்றார்.