உ.பி.யிலும் ஒரு பாக்யராஜைப் பாத்தீங்களா சாரே...!
லக்னோ: நடிகர் பாக்யராஜ் இயக்கிய அந்த ஏழு நாட்கள் பட கிளைமாக்சை நிஜத்தில் அரங்கேற்றியுள்ளார் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். பெற்றோர் மற்றும் ஊரார் சம்மதத்துடன், தன் மனைவியை அவரது காதலரோடு வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் பரிசாபாத் மாவட்டம் பிகாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், சந்தாவின் விருப்பத்திற்கு மாறாக அவரை பூல்சந்த் என்ற இளைஞருக்கு கடந்த 2012ம் ஆண்டு அவரது பெற்றோர் மணம் முடித்து வைத்தனர்.
தன் புதிய மனவியை பலிபூரப்பில் உள்ள தனது இல்லத்தில் விட்டு விட்டு உடனடியாக பணி நிமித்தமாக ஜலந்தர் சென்று விட்டர் பூல்சந்த். இதனால், கணவனும், மனைவியும் போனில் மட்டுமே பேசி வந்தனர்.
இந்நிலையில், சூரஜ் அதே ஊரில் உள்ள தனது உறவினரைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் மீண்டும் சந்தாவைச் சந்தித்துள்ளார். மீண்டும் அவர்களுக்குள் காதல் மலர ஆரம்பித்தது.
பூல்சந்த் வெளியூரில் இருந்ததால், சந்தா தனது காதலர் சூரஜுடன் தடையேதுமின்றி பழகி வந்துள்ளார். இந்த விவகாரம் பூல்சந்துக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சந்தாவிடம் இது தொடர்பாக அவர் விசாரித்துள்ளார்.
சந்தாவும் எதையும் மறைக்காமல் அனைத்தையும் கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்ந்து வைக்க முடிவு செய்தார் பூல்சந்த். இது குறித்து தன் தந்தையுடன் ஆலோசித்த பூல்சந்த், பின்னர் சந்தாவின் பெற்றோரையும் சந்தித்து சம்மதம் பெற்றுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக சந்தாவிற்கும், சூரஜிற்கும் ஊர்மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அத்தோடு நில்லாத பூல்சந்த் நிறையப் பரிசுகளையும், சந்தா, சூரஜுக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தி விட்டனர்.
ஆத்திரம் கொண்டு தவறான முடிவெடுக்காமல், ஆழ்ந்து யோசித்து செயல்பட்ட பூல்சந்தை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.