செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியபோது அது வெடித்ததில் 24 வயது வாலிபர் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியபோது அது வெடித்ததில் 24 வயது வாலிபர் பலியானார்.
ராஜஸ்தான் மாநிலம் கொர்மா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜுலால் குஜ்ஜார். 24 வயது வாலிபரான இவர், தனது மொபைல் போனை வழக்கம்போல் வீட்டில் சார்ஜ் செய்வதற்காக, அதன் வயரை பிளக்கில் செருகிவிட்டு, போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவருடன் அதில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சார்ஜ் ஆகிக்கொண்டிருந்த பேட்டரி பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ராஜூலால் படுகாயமடைந்தார். அவரது மார்பு மற்றும் கைகளில் காயம் ஏற்படவே, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜூலால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் லால் மீனா, மின்சார 'ஷாக்' அடித்ததாலும், மார்பு மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதாலும் அந்த வாலிபர் உயிரிழக்க நேரிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.