தங்கைக்கு 6, (கள்ள) காதலனுக்கு 10 குத்து.. கூடவே தங்கியிருந்து கொடூரமாக கொன்ற அண்ணன் கைது!
பெங்களூர்: கணவரை விட்டு காதலனுடன் ஓடி வந்த தங்கையை தேடிப் பிடித்து கொலை செய்து அவரது காதலனையும் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கஞ்சிநாலா கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (25). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பசவராஜு (28) என்பவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. பசவராஜு வேறு ஜாதிக்காரர் என்பதால், இந்த காதலுக்கு கஸ்தூரி வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், பசவராஜுவுடன், கஸ்தூரி ஓட்டம் பிடித்துவிட்டார். விடாது விரட்டிச் சென்று கண்டுபிடித்த கஸ்தூரியின் உறவுக்காரர்கள் காதலர்களை பிரித்து, கூட்டி வந்தனர். ஒரு மாதத்திலேயே தங்கள் ஜாதியை சேர்ந்த ஹூப்ளியை சேர்ந்த 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் சில வாரங்கள் மட்டுமே கணவருடன் வசித்த கஸ்தூரி, காதலன் பசவராஜை திருமணம் செய்துகொண்டு, பெங்களூர் ஓடி வந்துவிட்டார். பெங்களூரின் சோழதேவனஹள்ளி பகுதியில் போலீஸ் ஏட்டு ராஜண்ணா என்பவர் வீட்டில் கடந்த இரு மாதங்கள் முன்பு குடிவந்தது இந்த ஜோடி. டெய்லர் வேலை செய்து பிழைப்பை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்கதவு திறந்திருந்த நிலையில், உள்ளே ரத்த வெள்ளத்தில் இவ்விருவரும் இறந்து கிடந்தனர். சோழதேவனஹள்ளி போலீசாரிடம், வீட்டு ஓனர் ராஜண்ணா அளித்த வாக்குமூலத்தில், "சனிக்கிழமை இரவு, பசவராஜ் தங்கியிருந்த வீட்டின் வெளியே, சேர் போட்டு ஒரு நபர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் நீங்கள் யார் என்று நான் கேட்டதற்கு, கஸ்தூரியின் அண்ணன் ஹனுமந்தராயப்பா என்று கூறினார். பிறகு உடனே வீட்டுக்குள் போய்விட்டார்" என்று கூறியுள்ளார்.
எனவே, கஸ்தூரி தங்கியுள்ள இடத்தை தெரிந்து கொண்டு வந்த ஹனுமந்தராயப்பா, இரவு வீட்டை பூட்டிவிட்டு, இருவரையும் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதனிடையே பிரேதப்பரிசோதனையின்போது, கஸ்தூரி உடலில் 6 இடங்களிலும், பசவராஜ் உடலில் 10 இடங்களிலும் கத்தி குத்து காயங்கள் உள்ளது தெரியவந்தது. தங்கள் குடும்ப கவுரவத்தை கெடுத்துவிட்டு திருமணமான பிறகு வேறு ஆணுடன் ஓடிவிட்டதால் ஹனுமந்தராயப்பா கோபத்தில் இக்கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சிறப்பு படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை நடந்து 24 மணி நேரத்திற்குள்ளாக இன்று அதிகாலையில், ஹனுமந்தராயப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி டிரைவர் வேலை பார்த்து வரும் ஹனுமந்தராயப்பா, இக்கொலையை தான்தான் செய்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.