மகாராஷ்டிரா தேர்தல்: 'கேப்டன்' மோடி தான் ஆனால் 'மேன் ஆப் தி மேட்ச்' அமித் ஷா
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா தான் மேன் ஆப் தி மேட்ச் ஆகியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மராத்தி, மராத்தி என்று முழங்கும் சிவசேனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது பாஜக. முன்னதாக தொகுதி பங்கீடு குறித்து பிரச்சனை எழுந்தபோது சிவசேனாவுடனான கூட்டணி உடைந்தால் மகாராஷ்டிராவில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று பாஜகவில் உள்ள பலர் தெரிவித்தனர்.
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவோ சிவசேனாவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை உடைக்க துணிச்சலுடன் முடிவு எடுத்தார். லோக்சபா தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றபோதிலும் தற்போது சட்டசபை தேர்தலில் அதனால் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற முடியவில்லை.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மறைவுக்கு பிறகு உத்தவ் தாக்கரேவால் அவரது அப்பாவின் அளவுக்கு பெரிய ஆளாக முடியவில்லை. இந்த தருணத்தில் கூட்டணியை உடைத்ததால் தான் பாஜகவால் மகாராஷ்டிரா மக்களிடம் வாக்குகள் பெற முடிந்தது என்று கூறப்படுகிறது.
தங்கள் ஆதரவு இல்லாமல் மோடி அல்ல அவரது அப்பாவால் கூட மகாராஷ்டிராவில் வெற்றி பெற முடியாது என்று கர்வமாய் கூறிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் முடிவுகள் நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்.
மகாராஷ்டிரா பாஜகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டபோது அதில் தலையிட்டு தீர்த்து வைத்தவர் அமித் ஷா. மேலும் பாஜக மாநில தலைவராக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற தேவேந்திர பட்னாவிஸை நியமித்ததும் அமித் ஷா தான். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களில் பிசியாக இருந்தபோது அமித் ஷா தான் மும்பைக்கு வந்து நள்ளிரவில் பல கூட்டங்களை நடத்தி கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.