ரூ.25,000 கடன்... அண்ணனிடம் மனைவியை அடகு வைத்த கணவர்!
சண்டிகார்: பண விவகாரத்தில் தனது மனைவியை சகோதரரிடம் கணவரே அடகு வைத்த சம்பவம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்கு கைமாறாக அழைத்து வரப்பட்ட தம்பி மனைவியை கணவரின் சகோதரர் நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.
அரியானா மாநிலம் பாய்வானி மாவட்டம் சர்க்கி டாரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவர் தனது மூத்த சகோதரரான விஜயிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை.
அதனால், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தனது மனைவியை சகோதரன் விஜயிடம் அடகு வைத்துள்ளார் சஞ்சய். பணத்தைக் கொடுத்து விட்டு மீண்டும் மனைவியை அழைத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.
விஜய் தனது நண்பர் ஹர்கேசுடன் இணைந்து தினமும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே அவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கமடைய வைத்துள்ளனர். விஜயின் மனைவி பிம்லாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளாக்க்ர்.
இதனால், அப்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. மகளின் நிலை குறித்து அறிந்த அவரது பெற்றோர், விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மருத்துவ சோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை தான் என தெரிய வந்துள்ளது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண்ணிற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் சர்க்கி டாரி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விஜய், அவரது மனைவி மற்றும் நண்பர் ஹர்கேஸ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.