பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்- 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கியது மும்பை கோர்ட்
மும்பை: மும்பையில் தாயை அடித்துக்கொன்ற மகனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மும்பை கொலபா வாடி பகுதியை சேர்ந்தவர் ராம்கிர். இவர் தனது 75 வயது தாயார் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராம்கிர் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் அவரது தாயார் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது தாயார் ராம்கிரை திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராம்கிர் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாயாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த ராம்கிரின் தாயாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்கிரை கைது செய்தனர். பின்னர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு எதிராக 14 பேர் சாட்சியம் அளித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி ராம்கிருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி கல்பனா உத்தரவிட்டார்.