காரை திருடி ஆன்லைனில் அதன் உரிமையாளரிடமே விற்க முயன்ற பலே நபர்!
நொய்டா: நொய்டாவில் ஒருவர் காரை திருடி அதை ஆன்லைனில் அதன் உரிமையாளரிடமே விற்பனை செய்ய முயன்று சிக்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனியை சேர்ந்தவர் அகமது. அவர் கடந்த ஆண்டு நொய்டாவில் உள்ள செக்டர் 21ல் இருந்து திருடுபோன கார் ஒன்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயன்றார்.
அவர் நேரம் காரின் உரிமையாளர் குல்வந்த் சிங்கே அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி அவர் அகமதுவிடம் டீல் பேசி நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார்.
காரை விற்க நொய்டாவுக்கு வந்த அகமதை போலீசார் கைது செய்தனர். ஜுல்பிகர் என்பவர் அந்த காரை தன்னிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்ததாகவும், அதையே தான் விற்பனை செய்ய முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டுப் பொருட்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது இது ஒன்றும் முதல் முறை அல்ல என போலீசார் தெரிவித்துள்ளனர்.