ரூபாய் நோட்டுல காந்திய காணோம்! - ஏடிஎம்மில் பணம் எடுத்தவர் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்தவரின் ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
மொரேனா : மத்திய பிரதேசத்தில் ஏடிஎம்மில் எடுத்த பணத்தில் காந்தியின் உருவம் அச்சிடாமல் வெளிவந்தது அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொரேனா பகுதியை சேர்ந்த கோவர்தன் ஷர்மா என்பவர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 2 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஏடிஎம் மெஷினில் இருந்து வெளியே வந்த நான்கு 500 ரூபாய் நோட்டுகளை பார்த்த கோவர்தன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் 500 ரூபாய் நோட்டுகள் எதிலுமே காந்தியின் உருவம் அச்சிடப்படவில்லை, இதனால் தன்னிடம் இருப்பது நல்ல நோட்டா கள்ள நோட்டா என்று பதறியுள்ளார் கோவர்தன்.
இதனையடுத்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு ஏடிஎம்மில் எடுத்த பணம் குறித்து புகார் அளிக்க இதற்கு அதிகாரிகள் கோவர்தன் கையில் இருப்பது நல்ல நோட்டு தான் என்றும், பிரிண்டிங் கோளாறு காரணமாக காந்தியின் உருவம் அச்சடிக்காமல் விடுபட்டிருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் காந்தியின் உருவம் இல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 25ம் தேதி மத்திய பிரதேசத்தின் ஷேப்பர் பகுதியில் இதே போன்று ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் காந்தியின் உருவம் அச்சிடப்படாமல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம்மில் வரும் ரூபாய் தாள்களே மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்படாமல் இருப்பதால் எது உண்மையான ரூபாய் நோட்டு, எது கள்ள நோட்டு என்று தெரிந்து கொள்ள முடியாமல் குழம்பியுள்ளனர் மக்கள். ஆனால் வங்கிகளோ பிரிண்டிங் கோளாறு என்று சர்வசாதாரணமாக கூறுகின்றன.