டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்
டெல்லி: டெல்லியில் தெரு நாய் ஒன்றை காப்பாற்ற ஒருவர் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது ஆஸ்டன் மார்டின் காரை மரத்தில் மோதியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிஷ் சபர்வால். அவர் தனக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மார்டின் காரில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே கிளம்பினார். அவர் சானக்யாபுரியில் உள்ள இத்தாலிய தூதரகம் அருகே சென்று கொண்டிருக்கையில் தெரு நாய் ஒன்று சாலையை கடந்துள்ளது. அதை பார்த்த சபர்வால் நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்ப அது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சபர்வால் காயம் இன்றி தப்பித்துக் கொண்டார். ஆனால் காரின் முன்பக்கம் கடும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். கார் உரிமையாளரிடம் விசாரித்து வருகிறோம் என்றார்.
விபத்துக்குள்ளான கார் ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் மாடல் ஆகும். 4 ஆயிரத்து 735 சிசி என்ஜின் கொண்ட அந்த கார் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. திறமை வாய்ந்த டிரைவர்களால் மட்டுமே அந்த கரை ஓட்ட முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.