மியான்மருக்குள் நுழைந்து வடகிழக்கு மாநில தீவிரவாதிகளை 'வேட்டையாடிய' இந்திய ராணுவம்!!
இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் மியான்மர் பகுதிகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து நேற்று இரவு அதிரடித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் கடந்த 4-ந் தேதியன்று ராணுவத்தினர் மீது வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாம் மீது நாகாலாந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ராணுவத்தை கடும் அதிர்ச்சியடைய வைத்த இத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் அண்டை நாடான மியான்மருக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளாலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம்களை அழிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதற்கான உத்தரவை பிரதமர் அலுவலகம் நேற்று இரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று இரவு மியான்மர் எல்லைக்குள் நுழைந்து ராணுவம் தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இது தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான கூடுதல் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ரன்பீர்சிங் கூறியதாவது:
மியான்மரில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளே மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மியான்மர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர் மியான்மருக்குள் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது இந்தியா- மியான்மர் எல்லையில் அதாவது நாகாலாந்து- மணிப்பூர் மாநில எல்லைப் பகுதியில் இரு இடங்களில் இரு தீவிரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களது முகாம்கள் அழிக்கப்பட்டன. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மியான்மர்- இந்தியா இருநாடுகளும் இத்தகைய பயங்கரவாதிகளை ஒடுக்க தொடர்ந்தும் இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ரன்பீசிங் கூறினார்.
மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய அனைத்து ராணுவத்தினரும் பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டனர் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது எம்-17 ரக ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் தீவிரவாதிகளின் இரு முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 50 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் எல்லை தாண்டி மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது ராணுவத்தினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.