பலாத்காரங்கள் அதிகரிக்க பெண்களே காரணம் என்றவர் தான் ஹரியானாவின் புதிய முதல்வர்!
சன்டிகர்: இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு பெண்கள் தான் காரணம் என்று கூறிய முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான மனோகர் லால் கட்டார் தான் ஹரியானாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ம் தேதி நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து அங்கு பல காலம் நடந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பாஜக ஹரியானா முதல்வராக முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான மனோகர் லால் கட்டாரை தேர்வு செய்துள்ளது. கட்டார் பெண்கள் உரிமை, திருமணமத்திற்கு முன்பு உறவு கொள்வது, காப் பஞ்சாயத்துகள் ஆகியவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியவர் ஆவார்.
முன்னதாக அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறுகையில்,
இந்தியாவில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்க பெண்கள் தான் காரணம். ஒரு பெண் ஒழுங்காக ஆடை அணிந்தால் ஆண்கள் அவரை தவறான முறையில் பார்க்க மாட்டார்கள். இளம் வயதினர் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணியும் சுதந்திரம் இல்லையா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், சுதந்திரம் வேண்டுமானால் நிர்வாணமாக சுற்ற வேண்டியது தானே? சுதந்திரத்திற்கும் ஒரு எல்லை வேண்டும். ஆடை குறைப்பு மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம். நம் கலாச்சாரம் பெண்களை ஒழுங்காக ஆடை அணியுமாறு கூறுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணம் சரியில்லை என்றால் தான் திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வது நடக்கிறது. காப் பஞ்சாயத்துக்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காக்க முயற்சி செய்வதால் அதன் தீர்ப்புகள் நியாயமானது என்றார்.